விசிக இல்லையென்றால்.. தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. திருமாவளவன் ஓபன் டாக்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கைத் தலைவராக அம்பேத்கரை வைத்ததற்கு காரணம் விசிக தான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் விஜய் கட்சி தொடங்கி இருந்தால், அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்திருக்க மாட்டார் என்று கூறிய திருமாவளவன், தொடர்ந்து அம்பேத்கரை பேசுபொருளாக மாற்றியது விசிக தான் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் இயங்கி வருகிறது. நாளை தவெக செயற்குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. தவெக உடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காத நிலையில், தொடர்ச்சியாக அக்கட்சி தரப்பில் விசிகவை அணுகி வருகின்றனர்.

விசிக - தவெக கூட்டணி?
ஏற்கனவே விசிகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதை தவெக தலைவர் விஜய் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு மேடைகளிலும் விஜயை விமர்சித்து வருகிறார். அண்மையில் கூட பெரியாரை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் விஜய் அமைதி காத்ததை விமர்சித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலக, திருமாவளவன் விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் பேட்டி
இந்த நிலையில் தவெக அண்ணல் அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்க விசிகவும் முக்கிய காரணம் என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் திருமாவளவன், சினிமாவில் இருந்து நடிகர்கள், இயக்குநர்கள் அரசியலுக்கு வரும் போது தமிழக மக்களிடையே ஒரு வரவேற்பு இருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் நடிகர்களை மக்கள் தூக்கி கொண்டாடுவதில்லை.
தலித் வாக்கு வங்கி
பவன் கல்யாணால் கூட இதுவரை ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லிவிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, திருமாவளவனிடம் இருக்கும் தொண்டர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்றெல்லாம் பேசினார்கள். இப்போது விஜய் வந்தபின், தலித் வாக்கு வங்கி சிதறடிக்க போகிறார் என்கிறார்கள்.
முதல் தலைமுறை வாக்காளர்கள்
இது அதீதமான மதிப்பீடு. தலித் மக்கள் மட்டும் விஜய் பின்னால் போவது கிடையாது. அனைத்து சாதிகளில் இருந்தும் முதல் தலைமுறை இளைஞர்கள் விஜய் பின்னால் செல்கிறார்கள். அனைத்து சமூகங்களில் இருந்து அரசியல்படுத்தப்படாத சக்திகள், சினிமா மீது ஈடுபாடு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் விஜய் அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றது மகிழ்ச்சி தான்.
அம்பேத்கர் கொள்கை தலைவர்
நேரடி அரசியலில், சமூகத்தில் அம்பேத்கரை பேச வைக்கும் அளவிற்கு நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். விசிக என்ற அமைப்பு இல்லாத காலத்தில் விஜய் கட்சியை தொடங்கி இருந்தால், அவர் அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்திருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. ஏனென்றால் மைய நீரோட்டத்தில் அம்பேத்கரை பேசப்படும் பொருளாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications