விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பதவி... திருமாவளவன் போட்ட கண்டிஷன்கள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அதற்கேற்றவாறு ஆற்றல் மிக்க நபர்களை புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனிடையே புதிய மாவட்டச் செயலாளராக விரும்புவோர் கட்சியின் இணையம் வழியாக விண்ணபிக்கலாம் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
திணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. "இவரா.. அவரா".. அதிருப்தியில் சீனியர்கள்..!
மாவட்டச் செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். முதற்கட்டமாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு புதியவர்களை கொண்டு வர திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணபிக்கலாம் என்றும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
நேரில் இல்லை
இதேபோல் மாவட்டச் செயலாளராக வர விரும்புவோர் இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மற்றபடி கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள் மூலமோ, நேரிலோ இது தொடர்பாக எந்த கோரிக்கையும், விண்ணப்பமும் அளிக்கக்கூடாது என திருமா அறிவித்துள்ளார். இதனிடையே ஆறு மாதகாலம் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணபிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
2 முறைகளுக்கு மேல்
மாவட்டச் செயலாளராக 2 முறைக்கு மேல் இருந்தவர்களுக்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படாது என்ற அதிர்ச்சியையும் திருமா கொடுத்துள்ளார். இது சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிருப்தி தந்தாலும், புதிதாக பதவியை எதிர்பார்த்தவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மாவட்டச் செயலாளர் நியமனம் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்றும், தேவையின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 30
திமுக, அதிமுகவை போல் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிக்கவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். திருச்சி, கோவை, சென்னை, மதுரை என பெருநகரங்கள் அடங்கிய மாவட்டங்களை மூன்று முதல் நான்கு வரை பிரிப்பது என ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே மாவட்டங்கள் பிரிப்பு பற்றி ஜூன் 30-ம் தேதிக்குள் நிர்வாகிகள் கருத்தறிந்து முடிவு இறுதி செய்யப்படும் என திருமா கூறியுள்ளார்.