பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மனித சங்கிலி-ஏன் நடத்தினோம் தெரியுமா? விலாவாரியாக விவரித்த திருமாவளவன்
சென்னை: திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையை தடுக்கவே தமிழகம் தழுவிய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், சிபிஐ- எம், சிபிஐ, மதிமுக, இ.யூ.முஸ்லீம் லீக், மமக, தவாக ஆகிய தோழமைக் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சனாதன சமூகப் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவளித்த பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கும், கலந்து கொண்ட பொது மக்களுக்கும் விசிக சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எப்போதும் தடை விதிக்கணும்.. சட்ட ரீதியாகவும் நடவடிக்கை! திருமாவளவன் பரபர
33 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் அணிவகுப்பு
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் 33 அரசியல் கட்சிகள் 44 இதர இயக்கங்கள் உள்ளிட்ட எண்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்றுள்ளன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ்எஸூக்கு எதிராக ஒன்று குவிந்தன என்பது புதிய வரலாறு.
மனித சங்கிலி அல்ல.. மனித அரண்
தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் பார்வையும் மதவெறி அரசியலுக்கு எதிரான போக்கும் கொண்ட ஒரு மாநிலமாகவுள்ளது என்பதை இந்த அறப்போரில் நிகழ்ந்த அணிதிரட்சி ஒரு சான்றாகவுள்ளது. இது மனிதச் சங்கிலி என்பதைவிட மதத்தை வைத்து அரசியல் செய்யும் சனாதன சங்பரிவார் கும்பலைத் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுக்கும் மனித அரணாகச் சுவரெழுப்பியதைப் போல் மக்கள் திரள் சென்னை அண்ணாசாலை நெடுகிலும் அணிவகுத்து நின்றனர்.
லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழ்நாடெங்கும் இலட்சக் கணக்கானவர்கள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்று சனாதன சக்திகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என ஓங்கி உரத்து முழங்கினர். தமிழ்நாட்டைக் குறிவைத்து தமிழ்நாட்டில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தீயநோக்கோடு் சனாதன சமூகப் பிரிவினைவாதிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ச்சியான அமைதியின்மையை உருவாக்கி தமிழ்நாடு வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அதன்மூலம் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.
ஓரவஞ்சகம் செய்யும் மத்திய அரசு
தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தராமல் தாமதப்படுத்தி இந்திய அரசின் திட்டங்களை இங்கே முறையாக செயல்படுத்த விடாமல் பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதையும் தாண்டி தமிழ்நாடு அனைத்து தளங்களிலும் வளர்ச்சி அடைந்து வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் இங்கே மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மொழியின் பெயராலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி வன்முறை வெறியாட்டத்துக்குக் களம் அமைக்கிறார்கள். அத்தகைய சனாதன சூழ்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதாகவே இந்த மனிதச் சங்கிலி அறப்போர் அமைந்தது.இதே அரசியல் விழிப்புணர்வோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்! சனாதன சங்பரிவார் சதிக்கும்பலிடமிருந்து - சமூகப் பிரிவினைவாதிகளிடமிருந்து நம் தமிழ்மண்ணைப் பாதுகாப்போம்! இவ்வாறு திருமாவளவன் கூறினார்.