'திமுககாரனா நானு?'.. சலசலத்த பிரஸ் மீட்.. விடிகாலை 3 மணிக்கு விளக்கமளித்த திருமாவளவன்.. இதான் விஷயம்
சென்னை: தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், பேட்டியின் போது ஆவேசமடைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின மக்கள் சிலருக்கு கடந்த டிசம்பர் மாதம் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. குழுந்தைகள் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். திடீரென எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இப்படி பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். இவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குடிநீர் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்று கூறினர்.

இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய இளைஞர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதாவது அந்த தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வழக்கு விசாரணையில் வேகமான முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குற்றவாளிகள் நீண்ட நாட்களாக கைது செய்யப்படாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறு இருக்கையில் நேற்று(ஏப்.19) சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் வேங்கைவயல் பிரச்னை குறித்து சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆவேசமடைந்தார்.
அதாவது, "வேங்கைவயல் விவகாரம் குறித்து கண்காணிப்புக் குழுவிடம் பேசியிருக்கிறோம். அரசு இந்த சம்பவத்தில் உண்மைகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்வதற்கான உறுதியை அளித்திருக்கிறார்கள். எனவே அரசின் நடவடிக்கையின் மீது நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்றார். பின்னர் குறுக்கிட்ட செய்தியாளர்கள் 'சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகிறதே?' என்று கேள்வியெழுப்பினர்,

"நாட்கள் என்பது ஒரு பிரச்சினை இல்லை. இத்தனை நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ராமஜெயம் கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக நாம் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். விசாரணையில் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் இருக்கலாம். தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றுகிற முயற்சியில் அரசு ஈடுபடவில்லை" என்று திருமாவளவன் பதிலளித்தார்.
மீண்டும் குறுக்கிட்ட செய்தியாளர், 'ஒரு சின்ன கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து நீண்ட நாட்களாக விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறதே?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திருமா, "சின்ன கிராமம், பெரிய கிராமம் என்பதல்ல பிரச்சினை. அரசு எதிராக இல்லை. அரசுக்கு தலித் மக்களுக்கு எதிராக செயல்படவேண்டிய தேவை இல்லை. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கட்டும். அதில் என்ன அவசரம், காலக்கெடு ஏதாவது இருக்கிறதா? புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கும் தேக்கத்திற்கான காரணம் இதுவரை நமக்கு தெரியவில்லை" என்றார்.
அப்போது அந்த செய்தியாளர், நீங்களும் தற்போது திமுககாரர் போல பேசுகிறீர்களே? என்றார். அதற்கு பதிலளித்த திருமாவளவன், "இந்த மாதிரி பேசுகிற வேலை வைத்துக்கொள்ள வேண்டாம். திமுககாரனா நானு? இதுபோல பேசுவதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் நாகரிகம் இல்லாத பேச்சு. உங்களுக்கும் ஒரு நாகரிகம் வேண்டும். நாகரிகம் தவறி பேசாதீர்கள். உண்மைகளின் அடிப்படையில் கேள்வி கேளுங்கள். உங்களுடைய கருத்தை திணிக்காதீர்கள்.

திமுகவை எதிர்த்து எங்களைப் போல போராட்டம் யாரும் நடத்தவில்லை. தலித் மக்கள் பிரச்சினைகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நாளை(ஏப்.20) கூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தவுள்ளோம். திமுக கூட்டணியில் இருப்பதால், இதுபோன்று அநாகரிகமாக பேசக்கூடாது" என்றார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பின்போது விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இந்த பேட்டி சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் இவரது பேச்சுக்கு 'மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்' கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த விஷயத்திற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். அதாவது, "வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.
பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. திமுக - விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ; விசிக'வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ; விசிக'வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ; விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ; திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செய்வதோ; அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம்.
ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்" என்று அதிகாலை 3 மணியளவில் ட்வீட் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications