பூரித்து போன அம்மா..ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு.. இதுக்குமேல வேற என்ன.. நெகிழ்ச்சியில் திருமா
மதுரை: நான்கு தொகுதிகளில் விசிக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் மனம் நிறைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் மதுரையில் ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு விசிக தலைவர் திருமாவளவனை அவரது அம்மா வரவேற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2 பொதுத்தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாஸ் காட்டியுள்ளது. திருப்போரூரில் - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன், செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றுள்ளது.. இதில் 2 தனி தொகுதிள், 2 பொது தொகுதிள் ஆகும்.
இந்த வெற்றி மூலம் தலித் மக்கள் வாக்குகள் மட்டுமின்றி மற்ற சாதியினரின் வாக்குகளையும் வெல்ல முடியும் என்று விசிக தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை முறியடித்துள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட ஜாதி மக்கள் வாக்களிக்கும் கட்சி என்ற கருத்து விசிக மீது நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டு வந்தது.
பானை சின்னம் வெற்றி
இந்த முறை அதை உடைத்துள்ளார் திருமாவளவன், பொதுத்தொகுதியை திமுகவிடம் போராடி வாங்கி மொத்தம் 6 தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வென்றுள்ளது. அதுவும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் புதிய சின்னமான பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டு இந்த வெற்றிகரமான சாதனையை படைத்துள்ளது. குறைந்த நாட்களில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து பொது தொகுதியில் வெற்றிபெற்றதற்கு விசிக தேர்தல் பணிகளை மிக சிறப்பாக இருந்ததே காரணம் என்கிறார்கள் திமுக கூட்டணியினர்.
தலித் முத்திரை
வெற்றி பெற்ற நாள் அன்று விசிக தலைவர் திருமாவளன் போட்ட ட்வீட் பதிவில் , 2 பொதுத் தொகுதி, 2 தனித்தொகுதி. விசிகவிற்கு 67% வெற்றி. வெறுப்பு அரசியலைத் தகர்த்தெறிந்து வெல்லும் விடுதலைச்சிறுத்தைகள். தலித் கட்சியென முத்திரை குத்தி சுருக்கி முடக்கி தனிமைப்படுத்த முயன்றோரின் சதியை முறியடித்தது பானை. இது சிறுத்தைகளின் வரலாற்றுச் சாதனை.
விரட்டுவோம்
தமிழக தேர்தல் களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும் தலித்மக்களைப் பெருவாரியாக அதிமுக பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும் விரட்டியடிப்பதுமே, என்று கூறியிருந்தார்.
திருமாவளவன் அம்மா
4 தொகுதிகளில் பெற்ற வெற்றிக்காக முக ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் திருமாவளவனை வெகுவாக பாராட்டினார்கள். மிகுந்த உற்சாகத்தில் மதுரைக்கு சென்ற திருமாவளனுக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து நான்கு தொகுதிகளில் விசிக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் மனம் நிறைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் மதுரையில் ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு விசிக தலைவர் திருமாவளவனை அவரது அம்மா வரவேற்றார். இந்த புகைப்படத்தை திருமாவளவன் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.