திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியல்.. திமுக மதவாத கட்சியா? பாஜகவுக்கு திருமா பதிலடி
கன்னியாகுமரி: பாஜகவினர் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியலை பரப்ப பார்க்கிறார்கள் அதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது எனவும், தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர். தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், திமுகவை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது, ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக் கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது எனவும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
குமரி மாவட்டம் மேல்புறம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கிறிஸ்துமஸ் விழா
அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட தலைவர்கள் கலந்து கொண்டனர். விருந்தினர்களை மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, பொம்மையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மேடையில் அமரச் செய்தனர்.
திருமாவளவன் பேச்சு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்," பாஜகவினர் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியலை பரப்ப பார்க்கிறார்கள். அதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
பாஜக மதவாத அரசியல்
திமுகாவை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக் கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. ஹிந்துக்களை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கிறது என்பது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தான் குரல் கொடுக்கிறோம்.
திமுக கூட்டணி
அதனால் தான் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாக்களித்து இந்த வெற்றியை பெற்று விட முடியாது. ஹிந்து சமூகத்தினரும் பெரும்பாலும் ஆதரிக்க கூடிய ஒரு அணியாகத் தான் எங்களுடைய கூட்டணி விளங்குகிறது.
ஆட்சில் பங்கு
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது தவறான முழக்கம் இல்லையே. யாருக்கும் எதிரான முழக்கமும் இல்லை. அது ஒரு ஜனநாயக முழக்கம். எல்லோருக்கும் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையிலும் தவறில்லை. பிழையில்லை. அதற்கான கருத்தை சாமி தோப்பு அடிகளார் இந்த மேடையில் பதிவு செய்துள்ளார்"என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications