“மோடி பேசியது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு.. இது ஆபத்தான அணுகுமுறை” -திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மோடி பேச்சு ஆபத்தான அணுகுமுறை என்று விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து திருமாவளவன் பேசியதாவது, "எப்படி இவ்வளவு பெரிய அண்டப்புளுகு, ஆகாச புளுகு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக பேசுகிறார் என்ற கேள்வி எழுகிறது. இது எவ்வளவு ஆபத்தான ஒரு அணுகுமுறை என்கிற அச்சம் மேலெழுகிறது. பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இத்தகைய அரசியலை செய்கிறது. பிரதமரே இப்படி பேசி இருக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பீகாரைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏதாவது புகார் அளித்தார்களா? அப்படி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பீகார் மட்டுமல்ல பல மாநிலங்களிலிருந்து வட மாநிலத்தவர் லட்சக்கணக்கானவர்கள் கோவை, திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இங்கே எந்த பிரச்சனையும் இல்லை. புலம் பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டிலே ஏதேனும் வழக்குகள் பதிவாகி இருக்கிறதா? என்ற ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். இது ஏற்புடையது அல்ல. பிரதமரின் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பாஜகவ விமர்சிக்கிற போதெல்லாம் ஒட்டுமொத்த இந்துக்களையும் விமர்சிக்கிறோம் என்று திசை திருப்புகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் RSS-யும், பாஜகவையும் அவர்கள் செய்கிற மதவாத அரசியலையும் விமர்சிக்கிற போதெல்லாம், அப்படி விமர்சிக்கிறவர்களை இந்துக்களின் விரோதிகள் என்று தோற்றத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
பிரதமர் பேசியிருப்பது திமுக என்ற பொருளில் பேசவில்லை அப்படி எங்கும் பதிவாகவில்லை. தமிழகத்தில் பீகாரிகளை துன்புறுத்துகிறார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கானா, கேரளா மாநிலங்களிலும் வட மாநிலத்தவர்கள், அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தையும் அவர் சேர்த்தே பதிவு செய்திருக்கிறார். ஆக அவருக்கு தேர்தல் அரசியல் முக்கியமானதாக இருக்கிறது. ஆதாயம் தேடுவதே அவரின் நோக்கமாக இருக்கிறது.
அதற்காக ஒடிசாவில் என்ன பேசினார்கள்? ஒடிசாவிலே போய் ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழன் ஆட்சி செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்கள். ஒரு ஐஏஎஸ் அதிகாரி அங்கே முதல்வர் ஆகிவிடுவார் என்று யூகம் செய்து அதையே அரசியலாக்கினவர்கள். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ் பெருமையை பேசுகிறார்கள் தமிழர் பெருமையை பேசுகிறார்கள். பாரதி கவிதையை மேற்கோள் காட்டுகிறார்கள். திருவள்ளுவரின் திருக்குறளை எடுத்து பேசுகிறார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தனி பெருமை உண்டு என்று பெருமையை சாதி பெருமைகளை பரப்புகிறார்கள்.
இப்படியெல்லாம் தமிழ்நாட்டிலே அரசியல் செய்யக்கூடியவர்கள், ஒடிசாவிலே போய் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாட்டைச் சார்ந்தவர், அவர் ஒடிசாவை ஆளுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா என்று அமித்ஷா போன்றவர்கள் எல்லாம் பேசினார்கள். ஆகவே இவர்கள் வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான யுக்திகளையே கையாளுகிறார்கள். மக்களுக்கு இடையிலே பாகுபாடுகளை உருவாக்குகிறார்கள், மோதலை உருவாக்குகிறார்கள். அதுதான் பிரதமரின் அணுகுமுறையாகவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications