எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும்.. விஜய்க்கு அந்த வலிமை கிடையாது.. திருமாவளவன் ஓபன் டாக்!
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணியை பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் வலிமை விஜய்யிடம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக அதிருப்தி வாக்குகளை விஜய் பெறுவார் என்று கூறியுள்ள திருமாவளவன், விசிக 8 தொகுதிகளிலும் வெல்வதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப்போட்டி நிலவுவதால், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளே, திமுக தனிப் பெரும்பான்மை பெறாது என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மே 4க்கு பின் ஆட்சியில் பங்கு தொடர்பாக பேசுவோம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணி தான் பெரும் வெற்றியை பெறும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டி போட்டு பிரிக்கிறார்கள்.
பொதுவாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான ஒரு கருத்து அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன. அந்த எதிர்ப்பு வாக்குகளை அந்தந்த காலங்களில் மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்தி கொண்ட கட்சிகள் பங்கு போட்டுள்ளன. அறுவடை செய்திருக்கின்றன.
இம்முறை திமுக கூட்டணியை எதிர்த்து களத்தில் இருக்கும் அதிமுக, விஜய், சீமான் ஆகிய 3 தரப்புக்கும் திமுக எதிர்ப்பே பிரதான அரசியல். அல்லது திமுக கூட்டணி எதிர்ப்பே முதன்மையான அரசியல். அவர்கள் மூவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப எதிர்ப்பு வாக்குகளை பகிர்ந்து கொள்கிறார்கள். புதிதாக களம் காணும் தவெக, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிரான வாக்குகளை பெறுகிறார்.
ஆனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் வலிமையை விஜய் பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் விசிக போட்டியிட்டுள்ள 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
விசிகவில் புதியவர்களுக்கு சீட் அளிக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்எஸ் பாலாஜி, ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகிய மூவருக்கும் சீட் கொடுக்கவில்லை. திமுகவில் கூட புதியவர்கள் 60 பேருக்கு அந்த கட்சி தலைமை சீட் கொடுத்துள்ளது. நான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது கட்சி நிர்வாகிகளுக்கே அதிர்ச்சி தான்.. 3 ஆண்டுகள் எம்பி பதவி மீதம் இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications