‘அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல’.. தவெக விஜய்க்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்
சென்னை: கூட்டணி ஆட்சி என்று முடிவுடன் தவெக விஜய் தன் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். கடந்தாண்டு விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இணைந்து அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் விஜய் பிரச்சார பயணத்திற்கு அனுமதி வழங்காதது ஏற்புடையதல்ல என்று திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக, அதிமுக கூட்டணிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் வருகிற 13 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

பாஜக அதிமுக கபளீகரம்
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "செங்கோட்டையன் தன்னிச்சையாக கட்சியின் நலனுக்காக குரல் கொடுத்தால் வரவேற்கிறோம், ஆனால் அது பாஜக இயக்கம் என்றால் அதிமுகவுக்கு நல்லதல்ல என்பதை சுட்டி காட்டியிருந்தோம். ஐயப்பட்டது போலவே அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்பதை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு என் மீது ஆத்திரம் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல், கூட்டணியிலும் தனித்து செயல்பட விடாமல் அதிமுகவை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் எந்த துணிச்சலில் பேசுகிறார்கள்.
எங்கிருந்து துணிச்சல்
அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் கட்சியில் இருந்து நீக்கியவரை அழைத்து அவர்கள் இருவரும் அரசியல் பேசுவதன் மூலம் அதிமுக மற்றும் அதன் தலைவரை என்ன நினைக்கிறார்கள், என்ன மதிப்பீடு செய்கிறார்கள், எந்தளவுக்கு அதிமுகவை அவர்கள் நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்களும், அதிமுக தொண்டர்களும் உணர வேண்டும். இதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
எங்கள் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறோம். சுமார் 22,000 பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களை எல்லாம் கணினிமயப்படுத்தியுள்ளோம். விரைவில் 234 தொகுதிகளுக்கு, தொகுதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் உள்ளோர் கலந்தோலோசனை செய்து நிர்வாகிகளை நியமனம் செய்வார்கள்.
விஜய்க்கு ஆதரவு
இந்தப் பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு தான் என்னுடைய மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை நான் திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் இப்போதே பயணத்திற்கு தயாராகிவிட்டனர். நாங்கள் உடனடியாக களத்திற்கு இறங்கவேண்டும் என்கிற கட்டாயமோ, அவசியமோ இல்லை. எங்களின் கட்டமைப்பை உறுதிப்படுத்திவிட்டு அதன் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம்.
விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம், செயல் சுதந்திரம் உள்ளது. அந்த வகையில் அவருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த காரணத்துக்காக அவரின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது அல்லது காலம் தாழ்த்தப்பட்டது என்பதை நான் இன்னும் அறியவில்லை. அதை அறிந்த பிறகு சொல்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications