ஆமாங்க.. ரஜினிகாந்துடன் அரசியல்தான் பேசினேன்.. அதுக்கு என்ன இப்ப?.. திருநாவுக்கரசர் கூல் பேட்டி
சென்னை: ரஜினிகாந்தை சந்தித்த போது அரசியல் குறித்து பேசினோம் என காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அந்த வகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில் ஓராண்டாகியும் அவர் கட்சியை தொடங்கவில்லை. இந்நிலையில் அவர் நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியை தொடங்கி யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது.
எதிர்பார்ப்பு
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தை சந்தித்தார். இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறி அவர் ரஜினி தொடங்கும் கட்சியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
திருநாவுக்கரசரை சந்தித்த ரஜினி
இந்நிலையில் தமிழக காங்கிரஸில் எஸ் திருநாவுக்கரசர் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள எஸ் திருநாவுக்கரசரின் வீட்டுக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார்.
திருமண அழைப்பிதழ்
கட்சி பதவி பறி போன நிலையில் ரஜினியுடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரஜினிகாந்த் தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக என்னை சந்தித்தார்.
ரஜினி
கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் ரஜினியும் அரசியல் தலைவர்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் முதலே ரஜினி அரசியல் பேசி வருகிறார். நானும் அவரும் பொதுவான அரசியல் சூழ்நிலைகள், நாட்டு நடப்புகள் குறித்து பேசினோம். அதில் குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ரஜினி கட்சியை எப்போது தொடங்குவார் என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.