சிறுமிகள் குறித்து ஆபாச பாடல்.. கானா பாடகர் சரவெடி சரண் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை
சென்னை: சரவெடி சரண் என்பவர் சிறுமிகள் குறித்துக் கேட்கக் கூசும் வார்த்தைகளில் பாடிய ஆபாசமான பாடல் இணையத்தில் வைரலான நிலையில், அவரை திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாகக் கேட்கக் கூசும் வார்த்தைகளில் ஒருவர் பாடியிருந்த ஆபாசமான பாடல் இணையத்தில் வைரலானது.

பெண் குழந்தைகள்
இந்த பாடல் வரிகளைக் கண்டித்த பலரும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பெண் குழந்தைகளுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டுள்ள இந்த பாடல் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்மத்தைக் கக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த பாடலை பாடிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

திருவள்ளூர் எஸ்பி வருண்குமார்
இதையடுத்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தனது ட்விட்டரில், இந்த நபர் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஆபாசமான பாடலை பாடியவர் சரவெடி சரண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரைத் திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் போலீசார்
இது தொடர்பாகத் திருவள்ளூர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குழந்தைகளைக் கடவுளுக்குச் சமமானவர்களாகக் கருதும் நமது நாட்டில் அவர்களது மென்மையான மற்றும் முதிர்ச்சியற்ற மனதினை பயன்படுத்தி அவர்களுக்கெதிராக பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அந்த குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வாழ்நாள் அழுவதும் தீரா துயரை அளித்து அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

வேதனைக்குரிய விஷயம்
அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க பல்வேறு சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு போலீஸ் உட்பட பல்வேறு சமூக நல அமைப்புக்கள் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தங்கள் சுயலாபத்திற்காகக் குழந்தைகளைத் தவறாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து வருமானம் தேடும் கும்பலும் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

சரவெடி சரண் கைது
இந்நிலையில் டோனி ராக் - போட்டி கானா என்ற பெயரில் சரவணன் (எ) சரவெடி சரண் என்கிற கானா பாடகர் பாடியுள்ள ஒரு வீடியோ பாடலில் பச்சிளம் பெண் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரித்திருப்பது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு வந்ததையொட்டி அவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்படி கானா பாடகர் சரவணன் (எ) சரவெடி சரண் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு தற்போது விசாரணையிலுள்ளது.

புகார் அளிக்கலாம்
இது போன்ற கடுமையான நடவடிக்கையின் மூலமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறாக இன்னல்கள் ஏதும் நிகழ்ந்தால் சற்றும் தயக்கமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

தொலைபேசி எண் வெளியீடு
மேலும் இவ்வாறான குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையைத் தூண்டும் விதமாக ஏதேனும் வீடியோ பதிவுகளோ அல்லது குறுஞ்செய்திகளோ தங்கள் கவனத்திற்கு வரும்போது அந்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 6379904848 என்ற அவரது பிரத்யேக எண்ணில் தொலைப்பேசி மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாகவோ தகவல் தெரிவித்துக் காவல் துறையுடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிக்க உதவுமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தொலைப்பேசி எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல் பரிமாறலாம் எனவும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications