திருவான்மியூர் ஏடிஎம்-இல் மர்ம அட்டை.. மொத்தமாக காணாமல் போகும் பணம்.. சிக்கிய வடமாநில கும்பல்
சென்னை: சென்னை, திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கருப்பு அட்டை ஒன்றை வைத்து பொதுமக்களின் பணத்தை தொடர்ந்து திருடி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் வரும் பகுதியில் கருப்பு நிற அட்டை ஒன்றை ஒட்டி வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒட்டி வைத்து நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளனர். அதவாது, பொதுமக்கள் யாரேனும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக வந்தால் அவர்களுக்குப் பணம் வராது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-இல் இருந்து சென்றவுடன், உடனடியாக உள்ளே சென்று அந்த கருப்பு நிற அட்டையை எடுத்துவிட்டு பொதுமக்களின் பணத்தை திருடிக் கொள்வதை வடமாநில கும்பலினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

திருவான்மியூர் ஏடிஎம் மட்டுமல்லாமல் இதுபோன்று பல்வேறு ஏடிஎம்களில் கருப்பு நிற அட்டையை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தபோது இந்தச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்வர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் மற்றும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வார இறுதி நாட்களில் மட்டும் சென்னைக்கு ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு செல்வது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வீக்கெண்டில் ஏடிஎம்-ஐ அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்பதால் வார இறுதி நாள்களை குறிவைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கருப்பு அட்டை மட்டுமல்லாமல், போலி சாவி தயாரித்து அதன் மூலம் ஏடிஎம்-ஐ திறந்து பணத்தை திருடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏடிஎம் களில் பணத்தை திருடிய பின்னர் ரயில்கள் மூலமாக உத்தரப்பிரதேசத்துக்கு தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சென்னை திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில், கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications