‛‛இது ஜனநாயக தேர்தல் அல்ல.. அதையும் தாண்டி கொடூரமானது’’.. விவாதமான நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு
சென்னை: லோக்சபா தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் இன்ஸ்டாகிராம் பதிவு பேசுபொருளாகி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5வது கட்ட தேர்தல் என்பது மே மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடித்து அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான் தேர்தல் நாளான ஏப்ரல் 19ல் மீண்டும் வேலூர் தொகுதிக்கு சென்று பூத்களில் விசிட் செய்தார்.
இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு லோக்சபா தேர்தலை விமர்சனம் செய்துள்ளார். அதாவது மலைப்பிரதேசத்தில் மன்சூர் அலிகான் நிற்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுடன் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் என்ற பாடலில் வரும், ‛‛உண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போகும்.. மாயம் என்ன பொன்மானே.. பொன்மானே.. என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது'' என்ற வரிகளை பின்னணி இசையாக சேர்த்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் மன்சூர் அலிகான், ‛‛மனிதன் உணர்ந்து கொள்வதற்கு இது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல; அதையும் தாண்டி., கொடூரமானது....!!'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மன்சூர் அலிகானின் இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications