பீகார் தேர்தலப்போ.. டெல்லியில் குண்டுவெடிப்பு? மோடி- அமித்ஷா- அம்பானி பொறுப்பில்லையா? திருமா கேள்வி!
சென்னை: நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13ஐ கடந்திருக்கும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் உள்துறை உளவுத்துறை ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி- அமித்ஷா- அம்பானி" கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
டெல்லியில் செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை சுமார் 6 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட்-1 நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. வெடிப்பு சத்தம் முழு பகுதியில் கேட்கப்பட்டதுடன், அருகிலிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்தனர்.
டெல்லி குண்டுவெடிப்பு
சிலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்பு தாக்கம் காரணமாக அருகிலுள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன. தகவலரிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களையும், சாலையில் சிதறிக் கிடந்த உடல்களையும், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவம் 13 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை சம்பவம்
2011 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு இதுவரை நினைவில் இருந்த அகலாத நிலையில், இப்போது மீண்டும் தலைநகரில் குண்டு வெடிப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்தி, நிலைமை குறித்து முழு தகவல்களையும் பெற்றுள்ளார். இதேபோல், அமித் ஷா, டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் நேரடியாக பேசி விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மோடி- அமித்ஷா- அம்பானி
இச்சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சம்பவ இடத்தைச் சுற்றி தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உள்துறை உளவுத்துறை ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி- அமித்ஷா- அம்பானி" கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருமாவளவன்
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது? உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும்? பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது.
டெல்லி தீவிரவாத சம்பவம்
ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனவரையும் கைதுசெய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications