திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா? அண்ணாமலை இடைவிடாமல் சொல்வது பற்றி திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சொல்லப்படுவது பற்றி திருமாவளவன் விளக்கம் தந்துள்ளார்.
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற முயற்சிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறிவருவது பற்றி அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன், சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறது; அதிமுக- திமுக இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என கடுமையாக கூறினார்.
அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்யவும் வேல்முருகன் மறுத்தார். ஈழப் பிரச்சனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் நிலைப்பாட்டை முன்வைத்து இந்த முடிவை எடுத்திருந்தார் வேல்முருகன். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வேல்முருகனையோ அவரது கட்சி பெயரையோ குறிப்பிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, பாஜக- பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது; எனக்கு பதவி என்பது தலைமுடிக்கு சமம்; எப்போது வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்வேன்; தமிழ்நாடு காவல்துறை பாஜகவினர் கட்டுப்பாட்டிலா இருக்கிறது என்றெல்லாம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியிருந்தார். அந்த கூட்டத்திலும் வேல்முருகன் பங்கேற்றார். மேலும் விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்; இதற்காக பாஜக பெயரை பயன்படுத்துகிறார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதியன்று வேல்முருகன், திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இருந்த போதும் அண்ணாமலை, தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற முடிவு செய்துவிட்டது என கூறி வருகிறார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தொல்.திருமாவளவன், நாங்கள் திமுக ஆட்சி நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். காவல்துறை போக்கினை விமர்சிக்கிறோம். இது தோழமை அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறதாகும். திமுக கூட்டணியை வலிமையாக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. இதில் தொடக்கம் முதலே உறுதியாக் இருந்து வருகிறோம். திமுக கூட்டணி, அகில இந்திய அளவில் வழிகாட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. திமுக- விசிக இடையே விரிசலை ஏற்படுத்த யாராலும் முடியாது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications