உடுமலை சங்கர் வழக்கில் அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை- ஏமாற்றம் தருகிறது: திருமாவளவன்
சென்னை: உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தமிழக அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்ட, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்திருக்கிறது. இதனிடையே இத்தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ள கருத்து:
|
தொல். திருமாவளவன் கருத்து
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலை- உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும்; அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே காரணங்களாகும். இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

ஏமாற்றம் தருகிறது- அருள்மொழி
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, உடுமலைசங்கர் கொலைவழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. முழுத்தீர்ப்பையும் படித்தால்தான் என்ன பிரச்சனை என்பது தெரியும். நீதிமன்றம் மக்களின் நம்பிக்கை அல்ல.. கடைசி நம்பிக்கை என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விசிக ரவிக்குமார்
இதேபோல் லோக்சபா எம்.பி. ரவிக்குமாரும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் மட்டும் போதாது. உரிய தண்டனை பெற்றுத் தரவும் வாதாட வேண்டும். தற்போதைய நிலைக்கு அரசுதரப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் ரவிக்குமார் இந்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுமலை சங்கர் சகோதரர் கருத்து
2016 ஆம் ஆண்டு என் சகோதரர் சங்கர் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட என் குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. என் சகோரர் சிந்திய ரத்தத்தின் ஈரம் கூட எங்கள் மனதிலிருந்து இன்னும் காயாதபோது என் சகோதரரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும் முதல் குற்றவாளியுமான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டிருப்பதும் மற்ற குற்றவாளிகளின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பதும் தவறான முன்னுதாரனமாகவே கருதுகிறேன்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த வழக்கு என் குடும்பம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, சமூக மாற்றத்தில் சாதி மீறி இணையேற்போரின்,சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் சம்மந்தப்பட்ட வழக்காகவே நான் கருதுகிறேன்.இது போன்ற தீர்ப்புகள் சாதி மீறி இணையும் இணையர்களை கொல்லும் சாதிவெறியர்களுக்கு முன்னுதாரனமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக நிச்சயம் நான் உச்ச நீதிமன்றத்தை அணுகி நீதியை பெற்றிட முயல்வேன் என்பதை தெரிவிக்கிறேன். சங்கரின் நினைவில் வாழும் உடன்பிறந்த சகோதரன் விக்னேஷ்வரன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications