பெரும்பாக்கத்தில் மது போதையில் நண்பர்கள் நடனம்.. இறுதியில் புழல் சிறைக்கு போக வைத்த சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் யூ பிளாக்கில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் இருந்த கோலம் ஆடிப்போக வைத்துள்ளது. ஒருவரின் இறுதிச்சடங்கில் மதுஅருந்துவிட்டு நடனமாடிய நண்பர்கள்,இப்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை பெரும்பாக்கம் எழில்நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் யூ பிளாக்கில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடம்பில் பலத்த காயங்கள் இருந்தது.

பெரும்பாக்கம் போலீசார் வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர், பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த 25 வயதாகும் கார்த்திக் என்பது தெரியவந்தது.
பழைய குற்றவாளியான கார்த்திக், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர் ஆவார். கார்த்திக்குடன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான குமார் (27), விஜயகுமார் (28), சரத் என்ற சரத்குமார் (35), சரண்ராஜ் என்ற கோகுல் (29), மற்றொரு கார்த்திக் (26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டை போட்டார்களாம்.
இதையடுத்து தனிப்படை போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த குமார், விஜயகுமார், சரத்குமார், சரண்ராஜ், மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஒருவரது இறுதிச்சடங்கில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துவிட்டு நடனம் ஆடியிருக்கிறார்களாம். அப்போது போதை இறங்கியதால் கார்த்திக் மது குடிக்க நண்பர் குமாரிடம் பணம் கேட்டாராம். அவர் மறுத்ததால் கார்த்திக், குமாரின் சட்டை பையில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறாராம். அப்போது குமாரின் சட்டை பை கிழிந்துவிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த சென்ற குமார், சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களான விஜயகுமார், சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து பார்க்கில் மது குடித்து கொண்டிருந்த கார்த்திக்கிடம் மீண்டும் தகராறு செய்தார்களாம். அப்போது கார்த்திக் தான் வைத்திருந்த மது பாட்டிலால் இவர்களை தாக்கினாராம். உடனே 5 பேரும் சேர்ந்து மது பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்ததும், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். கைதானவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications