சென்னை ஆவடி அருகே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து வந்த மூன்று ரயில்கள்.. சட்டென பயணிகள் செய்த செயல்
சென்னை: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரி - ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் இப்படி ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் 3 ரயில்கள் வந்ததாக பயணிகள் தெரிவித்தனர். நல்ல வேளையாக எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
சென்னையின் புறநகர் பகுதி மக்கள் பேருந்து போக்குவரத்தைவிடவும் அதிகப்படியாக மின்சார ரயில் போக்குவரத்தையே விரும்புகிறார்கள்.. சென்னைக்குள் தினசரி வேலைக்காகவும் பல்வேறு சொந்த பணிகளுக்காகவும், பலரும் சென்னைக்குள் வர ரயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள்.. மிக விரைவாக பயணித்து சென்னைக்குள் வர முடியும். கட்டணம் குறைவு, மாதாந்திர பாஸ், அலைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் ரயில் பயணம் சென்னை புறநகர் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

குறிப்பாக சொல்வது என்றால், ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், அரக்கோணம் பகுதி மக்களுக்கும், பொன்னேரி,கும்மிடிப்பூண்டி பகுதி மக்களுக்கும், காஞ்சிபுரம்.. செங்கல்ப்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதி மக்களுக்கும் புறநகர் ரயில் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. அதேநேரம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்களை நிறுத்தும் போது மட்டும் அவர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். சென்னை புறநகர் மின்சார ரயில்களை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இன்றி ஓரளவு சரியான நேரத்திற்கு சென்று வருகின்றன. சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனைகள் அரிதாகவே ஏற்படும். அப்படித்தான் நேற்றும் ஏற்பட்டது
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரி - ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 3 மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றன. இதனால் பயணிகள் பதற்றத்துடன் ரயிலில் இருந்து குதித்து வெளியே வந்தனர்.
பின்னர், இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ரயில்வே சிக்னல் என்ஜினீயர்கள் சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு பின் சிக்னல் சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. நடுவழியில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், பயணிகள் நீண்ட நேரம் அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications