விடாமல் போராடிய ஓபிஎஸ்.. ஒற்றை தலைமை முதல் இன்று வரை அதிமுகவில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்தது முதல் இன்று வரை நடந்தது என்ன? இறுதி வரை போராடி ஓபிஎஸ் வென்றது எப்படி?
Recommended Video
அதிமுகவில் பொதுக் குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
டிசம்பர் 1, 2021- அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர் என கட்சியின் சட்டவிதிகளில் அதிமுக பொதுக் குழு திருத்தம் மேற்கொண்டது.
டிசம்பர் 6, 2021- அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஜூன் 14, 2022- அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது.
ஜூன் 16, 2022- அதிமுகவுக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றும் ஒற்றை தலைமை சாத்தியம் இல்லை என்றும் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
ஜூன் 20, 2022- ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
ஜூன் 22, 2022- அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் டிவிஷன் பெஞ்சை அணுகினார்.
ஜூன் 23, 2022- அதிமுக பொதுக் குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் கையெழுத்திட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என தீர்ப்பளித்தது. இதையடுத்து அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக் குழு அறிவித்தது. மேலும் புதிய பொதுக் குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜூலை 6, 2022- ஜூலை 11 அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
ஜூலை 8, 2022- டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
ஜூலை 11- அதிமுக பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அத்துமீறி ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை சீல் வைத்தது. அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
ஜூலை 12, 2022- அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கட்சியின் வரவு செலவு கணக்குகளை அவர் கையாள்வார் என எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க 7 வங்கி மேலாளர்களுக்கும் ஓபிஎஸ் கடிதம்.
ஓபிஎஸ் கடிதத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமையை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வங்கிகள் வழங்குவதாக அறிவித்தன.
ஜூலை 13, 2022- அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. இந்த வழக்கில் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜூலை 20, 2022- அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வருவாய் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜூலை 23, 2022- அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.
ஆகஸ்ட் 10, 2022- அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது ஹைகோர்ட். நீதிபதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து அதிமுக வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆகஸ்ட் 11, 2022- அதிமுக பொதுக் குழு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ஆகஸ்ட் 17, 2022- அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.