திருப்பதி லட்டு சர்ச்சை! எஸ்ஐடி விசாரணையில் சிக்கிய ஏஆர் டெய்ரி உரிமையாளர்! இது தான் காரணமாம்!
சென்னை: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு ராஜசேகரன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினர்.
இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்தது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த நிறுவனத்தின் நெய் தரமற்றதாக இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டதோடு, அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்த ஏஆர் டைரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதை அடுத்து உணவு பொருள் கலப்படம், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஏஆர் டைரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. தொடர்ந்து சிபிஐயும் களத்தில் இறங்கியது.
அந்த குழு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தியது. தொடர்ந்து திண்டுக்கல்லில் மதுரை சாலையில் உள்ள ஏஆர் டெய்ரி ஆலையில் அவர்கள் சோதனை நடத்தி நெய்யின் மாதிரிகளை சேகரித்தனர். தொடர்ந்து குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ இயக்குனர் மேற்பார்வையில் ஐந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை போலி ஆவணங்கள் மூலம் அந்த நிறுவனம் பெற்றது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவன உரிமையாளர் ராஜூ ராஜசேகரன் மற்றும் விபின் ஜெயின், டெபில் ஜெயின், அபூர்வா சாவுடா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் நெய் விநியோகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் திண்டுக்கல் பால் நிறுவனத்தின் ஆவணங்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து வைஷ்ணவி என்ற நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் எஸ்ஐடி மூலம் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications