திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு.. கொடூரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த அசாமை சேர்ந்த ராஜு விஸ்வகர்மாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் ராஜுவை தாக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். தனியாக வந்த சிறுமியை நோட்டமிட்ட கொடூரன், நைசாக யாரும் இல்லாத நேரத்தில் வாயை பொத்தி அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை
இதையடுத்து அந்த நபரிடம் இருந்து எப்படியோ தப்பி சென்ற அந்த 8 வயது சிறுமி, நடந்ததை தனது பாட்டியிடம் கூற, தொடர்ந்து இந்த சம்பவம் வெளியில் தெரிந்தது. இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. மேலும் தனியாக சென்ற சிறுமியை அந்த நபர் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்செல்லும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார் தனிப்படை அமைத்து கொடூரனை தேடி வந்தனர்.
குற்றவாளியை பிடிக்க 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் கடந்த 26 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அந்த நபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர். இதில் அந்த கொடூரன் அசாமை சேர்ந்த ராஜு என்பதும் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. மேலும் தற்போது மனைவி அவரை விட்டு பிரிந்துவிட்டாராம்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
இதனால் தனியாக தான் வசித்து வந்துள்ளார். சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். தனது வழங்கப்பட்ட விடுமுறை நாளில், சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது தான் கஞ்சா போதையில் இருந்த கொடூரன், சிறுமியிடம் அத்துமீறியுள்ளான் என்பது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்று 13 நாட்கள் கழித்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இதனால் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர். இதன்பின்னர் விசாரணை முடிந்த அவனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். முகத்தை மூடியபடி குற்றவாளியை போலீசார் அழைத்து சென்றனர்.
தாக்க முயன்ற வழக்கறிஞர்கள்
பூந்தமல்லி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பாக ராஜூ ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். எனினும் போலீசார் அவனை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆரப்பாக்கம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் ராஜுவை முகத்தை மூடியபடி போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வாசலில் போலீசார் அவனை அழைத்து வந்த போது, வழக்கறிஞர்கள் சிலர் ராஜுவை தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications