திருவண்ணாமலை டூ சென்னை பயணம்.. வடபழனியில் ஒரு நாள் உழைப்பு.. ராஜவாழ்க்கை வாழ்ந்தவருக்கு ட்விஸ்ட்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே நிறுத்தி இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போனது. இந்த மோட்டார் சைக்கிளை திருவண்ணமலையில் இருந்து வந்து ல்பர்ட் ரோசாரியோ என்ற இளைஞர் திருடியதும், அந்த பைக்கை யாரிடமும் விற்க முடியாமல், இறுதியாக அதனை நண்பர்கருக்கு இலவசமாக கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைக்கு திருடர்கள் மிகவும் விவரமான காரியங்களை செய்கிறார்கள். சொந்த ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோ திருடாமல், பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ஏதாவது ஒரு ஊரில் ஸ்கெட்ச் போட்டு, நிமிடத்தில் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதாவது ஏற்கனவே கண்காணித்து பக்காவாக திருடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் திடீரென திட்டமிட்டு திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட திருடர்கள் சிசிடிவி காட்சிகளில் சிக்கினால் ஓகே, மற்றபடி அவர்களை பிடிப்பது சிரமமான காரியமாகிவிடுகிறது. சென்னையை பொறுத்தவரை திருடிவிட்டு பக்கத்து தெருவினை கூட தாண்டிவிட முடியாது.அந்த அளவிற்கு சிசிடிவி அதிகமாக உள்ளது. எளிதாக சிக்கிவிடுவார்கள். அப்படித்தான் ஒருவர் சிக்கியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றுவிட்டார்.
இதுபற்றி வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளை திருடியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆல்பர்ட் ரோசாரியோ (வயது 20) என்பவர் தான் என்பதை கண்டுபிடித்தனர். அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கைதான ஆல்பர்ட் ரோசாரியோ, சென்னை வடபழனி, ஆவடி பகுதிகளில் விலை உயர்ந்த ஒரே ரக மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து திருடி வந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் இருந்து அரசு பஸ்சில் சென்னை கோயம்பேடு வந்து இறங்குவாராம். பின்னர் இரவு நேரங்களில் நடந்தே சென்று விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிடுவாராம். நள்ளிரவில் சென்று அந்த மோட்டார் சைக்கிள்களை திருடிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
இவ்வாறு திருடிய மோட்டார் சைக்கிள்களை நன்றாக ஓட்டிவிட்டு பின்னர் குறைந்த விலைக்கு விற்று விடுவாராம். சில நேரங்களில் விற்க முடியாவிட்டால் அந்த மோட்டார் சைக்கிள்களை தனது நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்துவிடுவாராம். திருடிய வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்கின் மூடியை உடைத்து பெட்ரோலை நிரப்பி பயன்படுத்தி வந்தாராம். ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications