ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல கட்சிக்காரர்களுக்கு லிங்க்.. தமாகாவில் இருந்து ஹரிஹரன் நீக்கம்! வாசன் அதிரடி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான த.மா.கா நிர்வாகி ஹரிஹரன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் அருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்று இரவே ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரவுடி திருவெங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பித்து ஓட முயற்சித்ததால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேர் கைதாகி உள்ளனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அடுத்து, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி சேகர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவருடன் மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோர் தொடர்பில் இருந்ததும், இருவருக்கும் இடையே கொலை சம்பவம் தொடர்பாக லட்சக் கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மலர்க்கொடி, ஹரிஹர்ன் இருவரும் விசாரணைக்கு பிறகு நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அதிமுக நிர்வாகியான மலர் கொடியை இன்று காலை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் ஹரிஹரனும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமாக தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் மாநில மாணவர் அணி துணை தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஹரிஹரன் கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்" என அறிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே பாஜக நிர்வாகி செல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் திமுக நிர்வாகிகள், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர், தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications