சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதாலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் தேர்தலில் போட்டியிடும் பலரும் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் முதல் நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்தும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 8 நாட்கல் மொத்தம் அவகாசம் இருந்தாலும் இடையில் 4 நாட்கல் விடுமுறை தினம் வருகின்றன. எனவே மொத்தமே 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
இதனால் அரசியல் கட்சிகள் வேகமாக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர் நாளை முதல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளார். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ். சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல் திமுகவில் பலரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications