ஜெயித்தால் பாஜகவுக்கு தாவும் அந்த 6 பேர்... "வாய்ப்பில்லை ராஜா"... சீட் தர தயங்கும் அதிமுக !
சென்னை: தென்மாவட்டங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர போவது இல்லை என அதிமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பின்னாளில் அந்த கட்சியையே பதம் பார்த்துவிடும். பீகாரில் ஜேடியூவுடன் கூட்டணியில் இருந்தாலும் அருணாசல பிரதேசத்தில் ஜேடியூ எம்.எல்.ஏக்களை கபளீகரம் செய்தது பாஜக.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டு நாராயணசாமி அரசை கவிழ்த்தது பாஜக. தற்போது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறது பாஜக.

அதிமுக- பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுகவுடன் கட்டாய கூட்டணி வைத்துள்ளது பாஜக. அதிமுக தலைவர்கள் பலரும் நெருக்கடியின் காரணமாகவே இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போது பாஜகவுக்கு 20 தொகுதிகளை கொடுத்துள்ளது அதிமுக.

பாஜக அடாவடி
அதேநேரத்தில் அதிமுக எளிதாக வெல்லும் கோட்டை தொகுதிகளை குறிவைத்து பாஜக கேட்டு வருகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்களை தன்னிச்சையாகவே களமிறக்கி பிரசாரம் செய்து வருகிறது பாஜக. அந்த கட்சியின் இந்த அடாவடியை வேறுவழியே இல்லாமல் அதிமுக சகித்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக தீவிர ஆலோசனை
இன்னொருபுறம் அதிமுகவில் யார் யாருக்கு சீட் தரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கிறோமா? இல்லையா? என்பதற்கு அப்பால் ஜெயிக்கக் கூடிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுகவில்தான் இருக்க வேண்டும்; பிற மாநிலங்களைப் போல கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடியவர்களாக இருக்கக் கூடாது என்பதிலும் அதிமுக கவனமாக இருக்கிறதாம்.

6 அமைச்சர்களுக்கு நோ சீட்?
இதனடிப்படையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்டு வென்றால் பாஜகவுக்கு தாவக் கூடியவர்கள் என கருதுகிறதாம் அதிமுக மேலிடம். இதனால் இந்த 6 பேருக்கும் சீட் தராமல் ஒதுக்கி வைக்கலாமா? என்பது குறித்தும் தீவிரமான ஆலோசனையில் இருக்கிறதாம் அதிமுக.












Click it and Unblock the Notifications