நீட்: தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்- சரித்திரத்தில் முதல் முறை
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபை வரலாற்றில் ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவதும் அம்மசோதாவை சட்டசபை கூடி மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது இதுதான் முதல் முறை.
Recommended Video
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வு முறையை விலக்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை, 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

அமித்ஷா சந்திப்பில் சர்ச்சை
இம்மசோதா நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இம்மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வலியுறுத்தினார். அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி வலியுறுத்தியது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பிக்கள் குழு சந்திக்க முடியாமல் போனது சர்ச்சையானது.

லோக்சபாவில் ராகுல்
தமிழக சட்டசபை கடந்த ஜனவரி 5-ந் தேதி கூடிய போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகின்றன; நீட் தேர்வு தேவையற்றது என்பதும் அரசின் கருத்து என பேசினார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 8-ந் தேதி தமிழக சட்டசபை அனைத்து கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். இதன்பின்னர் ஜனவரி 17-ந் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு நேரில் சென்று நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வலியுறுத்தியது. கடந்த 2-ந் தேதி லோக்சபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் நீட் தேர்வுக்கு விலக்கு தர வலியுறுத்திப் பேசினர்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆனால் கடந்த 3-ந் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதமும் எழுந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் மீண்டும் சட்டசபையை கூட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.

சிறப்பு சட்டசபை கூட்டம்
இதனடிப்படையில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று கூடியது. இன்று காலை சட்டசபை சிறப்புக் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இம்மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். இதர அனைத்து கட்சிகளும் இம்மசோதாவை ஒரு மனதாக ஆதரித்தன. தமிழக சட்டசபையில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.












Click it and Unblock the Notifications