உரையை படிக்க மாட்டேன்.. இதுதாங்க காரணம்.. 2 விஷயங்களை அடுக்கிய ஆளுநர் ரவி!
சென்னை: மொத்தம் 2 காரணங்களால்தான் ஆளுநர் உரையை சட்டசபையில் முழுவதுமாக வாசிக்காமல் புறக்கணித்ததாக ஆளுநர் ரவி தெரிவித்தார். இதையடுத்துதான் சபாநாயகர் அப்பாவு, இந்த உரையை வாசிக்க தொடங்கினார்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது.
ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், கடந்த மாதம் சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.
கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநருக்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை தரப்பட்டது. தனது உரையை தமிழில் தொடங்கினார் ஆளுநர். சில நிமிடங்களிலேயே நன்றி வணக்கம் கூறி உரையை நிறைவு செய்து விட்டு அமர்ந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்ணா போன்ற சில வார்த்தைகளை மட்டுமே வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ரவி.
இந்த ஆண்டு சட்டசபையில் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை வாசித்தார். வாழ்க தமிழ்நாடு.. வாழ்க பாரதம் என்று மட்டும் கூறி உரையை முற்றிலும் புறக்கணித்தார் ஆளுநர் ரவி, அதற்கான காரணமாக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக சட்டசபையில் ஆளுநர் கூறினார். அதனுடன் உரையை முழுவதுமாக வாசிப்பதில் தார்மீக அடிப்படையில் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications