பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு.. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆவேசம்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை நேற்று பேசிய நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உடைந்தது. அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாலேயே கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் கூறிவந்தனர். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக பாஜக இடையே அவ்வபோது வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.

அதிமுக பாஜக மோதல்: அந்த வகையில், அண்மையில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, "எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார் என்று அண்ணாமலையை விமர்சித்து இருந்தார்.
எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலை: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று மாலை பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தவழ்ந்து, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்று கையை நீட்டி நீட்டி ஆவேசமாக பேசினார்.
அதிமுக போராட்டம்: அண்ணாமலை இப்படி பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் ஆர்பி உதயகுமாரும் இதற்கு அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்து இருந்தார். அண்ணாமலையின் பேச்சுக்கு அவரது கட்சிக்குள் இருந்தே அட்வைஸ் வந்தது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒரு கட்சி தலைவருக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்தார்.
உருவபொம்மை எரிப்பு: அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக இன்று சாடி வருகிறார்கள். இந்த நிலையில் தான், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும், அவரது உருவபொம்மையினை தீயில் கொளுத்தியும், அவரது உருவப்படத்தை செருப்பால் அடித்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கையில் அண்ணாமலை உருவத்தை கேலியாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோன்று நெல்லை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் அண்ணாமலையின் உருவ பொம்மையை தீயில் கொளுத்தி எரித்தனர். இதேபோன்று ராமநாதபுரத்திலும் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications