TN Budget: பள்ளி கல்வி துறைக்கு ரூ32,599.54 கோடி- ஆளில்லா விமான கழகம்; 10 புதிய கல்லூரிகள்- பிடிஆர்
சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) பள்ளி கல்வித்துறைக்கு ரூ32,599.54 கோடியும் உயர் கல்விதுறைக்கு ரூ5,389 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்துக்கு தனித்துவமான மாநிலக் கொள்கை வகுக்கப்படும். கல்வியாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு இதற்காக உருவாக்கப்படும்.

நிதி ஒதுக்கீடு
பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் ரூ32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் 3 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் -Tablet ரூ13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் இயக்கம்
2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அடிப்படை கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய 1784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.

10 புதிய கல்லூரிகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழைய எளிய மாணவர்களுக்கு கல்வி, கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறப்பு விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.
Recommended Video

முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமான கழகம்
மேலும் தரத்தை மேம்படுத்தி அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு, தரச்சான்றுக் குழ்வின் தரநிலையை அடைவதற்கு அரசு முன்னெடுப்புகளை மஏற்கொள்ளும். அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் குறிப்பாக ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 25 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ10 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக் கழகமாக ஆணை பிறப்பித்தும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக இருக்கும். மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமானங்களுக்கு என தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம், அண்ணா பல்கலைக் கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications