புதுக்கோட்டையில் முதல்வர் நேரில் ஆய்வு.. புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்
Recommended Video

புதுக்கோட்டை: கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து புதுக்கோட்டைக்குச் சென்று புயல் சேத விவரங்களை நேரில் கேட்டறிந்தார்.
வங்க கடலில் உருவான கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை வெகுவாக பதம் பார்த்து அம்மக்களை புரட்டிபோட்டு விட்டது.
இதனையடுத்து புயலால் இறந்தோரூக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.1000 கோடி
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அமைச்சர்கள் நியமனம்
இதனிடையே, ‘கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து சேதமடைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காலை கிளம்பினார்
புயல் சேதத்தை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி நேற்றுமுன்தினமே செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களை பார்வையிட கிளம்பியுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் காலை 5.30 மணிக்கு முதல்வர் புறப்பட்டார். புதுக்கோட்டைக்கு முதலில் சென்று அங்கு சேத விவரங்களை கேட்டறிந்தார்.

நிவாரண உதவிகள்
விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications