வட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1259.38 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட 2வது கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது நெம்மேலி. இங்கு தமிழக அரசின் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, கொட்டிவாக்கம், அடையார், பெசன்ட்நகர் உள்ளிட்ட தென் சென்னை பகுதியில் நாள்தோறும் வினியோகிக்கப்படுகிறது.
உ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ
கடல்நீரை குடிநீராக்க முடிவு
இப்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யயும் வகையில் கடல்நீரை குடிநீராகும் திட்டத்தின் 2வது அலகை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
கட்டுமான பணிகள்
இதன்படி நெம்மேலியில் தற்போது உள்ள குடிநீர் நிலையத்துக்கு அருகாமையிலேயே 20 ஏக்கர் நிலத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலை அமைக்கும் இயந்திரம் மூலம் அந்த இடம் சமப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கு இன்று (ஜுன் 27) அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் பங்கேற்பு
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வருகை தந்தார். அவர் ரூ.1259.38 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவருடன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
9 லட்சம் பேருக்கு நீர்
இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், "2003ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவி, சொந்தமாக்கி இயக்கி, திருப்பித்தரும் அடிப்படையில் (DBOOT) அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி நெம்மேலியில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு 22.2.2013 முதல் இயங்கி வருகிறது. இதன்மூலம் தென்சென்னை பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்
10 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்
இப்போது ரூ.1259.38 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.