நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி?
நெல்லை: நெல்லையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற தனியார் வங்கியில் பெற்ற கடனை பொதுத்துறை வங்கிக்கு மாற்றிய பெண்ணுக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென, கையில் பெட்ரோல் கேனுடன் ஒரு பெண் தன் குடும்பத்தினருடன் வங்கிக்குள் நுழைய, அங்கிருந்த அதிகாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறினர். "என் அனுமதியில்லாமல், என் காசோலையைப் பயன்படுத்தி, என்னைப்போலவே வேறொரு பெண்ணை நடிக்க வைத்து, வங்கியும் புரோக்கரும் சேர்ந்து என் பணத்தை ஆட்டையப் போட்டுட்டாங்க!" என்று அந்தப் பெண் கதறியபோதுதான், அங்கு நடந்திருந்த மெகா காசோலை மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. நெல்லையையே உலுக்கியுள்ள இந்த சினிமா பாணி மோசடி பற்றி விரிவாக பார்ப்போம்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி பத்மாவதி, ஒரு அங்கன்வாடி பணியாளர். இவர்களுக்கு ஒரு மகனும், மூணாறில் திருமணமான ஒரு மகளும் உள்ளனர். வசந்தகுமார் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவரின் மருத்துவச் செலவுகள் கழுத்தை நெரிக்க, வேறு வழியின்றி தங்களின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 6 லட்சம் கடன் பெற ஒரு தனியார் வங்கியை அணுகியுள்ளனர். இதற்காக, குமார் என்ற லோன் புரோக்கர் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடனுக்காக ஆறு காசோலைகளும் , வீட்டுப் பத்திரமும் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, "பத்திரத்தில் சிறிய சேதம் இருக்கிறது" என்று மழுப்பிய புரோக்கர் குமார், பாதுகாப்புக்காக என்று கூறி பத்மாவதியிடம் கூடுதலாக ஒரு கையெழுத்திட்ட காசோலையையும் வாங்கியுள்ளார்.
கடன் வந்தவுடன், வசந்தகுமார் தனது கணக்கிலிருந்து ரூ. 4.5 லட்சத்தை நெல்லை சந்திப்பில் உள்ள பத்மாவதியின் பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) கணக்கிற்கு மாற்றியுள்ளார். பணம் கணக்கிற்கு வந்ததை எப்படியோ மோப்பம் பிடித்த வள்ளி, புரோக்கர் குமாரின் துணையோடு வங்கிக்குக் கிளம்பினார். புரோக்கர் குமாரிடம் பத்மாவதி கூடுதலாகக் கொடுத்திருந்த அந்தக் காசோலை இருந்தது!
அவர்கள் நேராகப் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குள் சென்றனர். அங்கு வள்ளி, "நான்தான் பத்மாவதி" என்று போலி அடையாளம் காட்டி, ஆள்மாறாட்டம் செய்து, அந்தக் காசோலையைப் பயன்படுத்தி கணக்கில் இருந்த ரூ. 4.5 லட்சம் முழுவதையும் அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆனார்.
பெட்ரோல் கேனுடன் போராட்டம்
தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து பத்மாவதி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டபோது, "விசாரிக்கிறோம்" என்று கூறி நாட்களைக் கடத்தியுள்ளனர். வங்கி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஆத்திரமடைந்த பத்மாவதி, இன்று தனது குடும்பத்தினருடன் பெட்ரோல் கேன் ஏந்தி வங்கிக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்து பணம் எடுக்கப்பட்டது உண்மை எனத் தெரியவந்தது. தற்போது போலீசார் பத்மாவதியிடம் எழுத்துப்பூர்வப் புகார் பெற்று விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது போன்ற காசோலை மோசடிகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய விதிகள் பற்றி பார்ப்போம்
கையெழுத்திட்ட வெற்று காசோலைகளை ஒருபோதும் தராதீர்கள்
லோன் புரோக்கர்களிடமோ, நிதி நிறுவனங்களிலோ அவசரத்திற்குக்கூட கையெழுத்து மட்டும் போட்ட வெற்று காசோலைகளைத் தரவே கூடாது.
கிராஸ் காசோலைகள் மட்டுமே தருக
யாருக்காவது காசோலை தரும்போது அதன் இடது பக்க மேல் மூலையில் இரண்டு கோடுகள் கிழித்து 'A/c Payee Only' என்று எழுத வேண்டும். அப்படிச் செய்தால், அந்தப் பணம் குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிற்கு மட்டுமே போகும், யாரும் வங்கியிலிருந்து நேரடியாகப் பணமாக எடுக்க முடியாது.
பணம் எடுக்கும் வரம்பு
தற்போது ரிசர்வ் வங்கி ரூ. 50,000-க்கு மேல் காசோலை வழங்கினால், அதுகுறித்த விவரங்களை (காசோலை எண், தொகை, யாருக்குத் தருகிறோம்) வங்கியின் மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கிங் மூலம் வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்துள்ளது. இதை வாடிக்கையாளர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
எஸ்எம்எஸ் அலர்ட்
உங்கள் வங்கி கணக்கில் மொபைல் எண் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உடனுக்குடன் எஸ்எம்எஸ் வரும் வசதி செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
வங்கி அதிகாரிகளின் கடமை
பெரிய தொகையைக் காசோலை மூலம் தரும்போது, வாடிக்கையாளரின் முகத்தையும், ஆதார் போன்ற அடையாள அட்டையையும், கணக்கில் உள்ள புகைப்படத்தையும் வங்கி அதிகாரிகள் துல்லியமாக ஒப்பிட வேண்டும். இந்த வழக்கில் வங்கி ஊழியர்களின் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருவேளை மோசடி நடந்துவிட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன
துரதிர்ஷ்டவசமாக உங்கள் கணக்கிலிருந்து மோசடியாகப் பணம் எடுக்கப்பட்டுவிட்டால், பதற்றமடையாமல் செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம். பணம் எடுக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்த அடுத்த நிமிடமே வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து, உங்கள் கணக்கையும், காசோலைகளையும் முடக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வப் புகார்
உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்குச் சென்று, மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து, அதற்கான ஒப்புதல் நகலை வாங்க வேண்டும்.
சைபர் க்ரைம் புகார்
மத்திய அரசின் தேசிய சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930-க்கு உடனே அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் 24 மணி நேரத்திற்குள் புகார் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் உள்ளூர் காவல் நிலையத்தில் மோசடி செய்த நபர்கள் (புரோக்கர், ஆள்மாறாட்டம் செய்தவர்) மற்றும் வங்கி நிர்வாகத்தின் அலட்சியத்தின் மீது 'முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம்' பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கி விதிமுறை
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நிர்வாகத்தின் தவறு அல்லது மூன்றாம் நபர் செய்த மோசடியால் பணம் போனால், வாடிக்கையாளர் 3 நாட்களுக்குள் வங்கிக்குத் தகவல் தெரிவித்துவிட்டால், இழந்த பணத்தை வங்கியே முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் என்பது சட்டம் ஆகும்.
-
குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’














Click it and Unblock the Notifications