நோயாளிகள், ஏழை மக்களுக்கு இலவச சேவை.. மதுரை ஆட்டோ டிரைவரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மருத்துவமனைக்கு நோயாளிகளை இலவசமாக அழைத்து செல்லும் மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
உலக நாடுகளில் தனித்துவம் மிக்க நமது இந்திய திருநாட்டை கொரோனா அலை மொத்தமாக சாய்த்துள்ளது. கொடிய கொரோனாவால் மக்கள் படும்பாடு சாதாரணமானது அல்ல.

ஒன்றுபடும் மக்கள்
கொரோனாவை சமாளிக்க நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு குறித்து அறிவதற்கு பலர் உதவி செய்து வருகின்றனர். சிலர் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அவசர தேவைக்கு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு சிலர் உதவி புரிந்து வருகின்றனர்.

மக்களுக்கு சேவை
அவசர காலத்தில் மக்களுக்கு உதவி செய்து வருபவர்களின் உன்னத பட்டியலில் இணைந்துள்ளார்
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த குருராஜ். ஆட்டோ டிரைவரான குருராஜ் 10 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். மக்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்த குருராஜ், ஏற்கனவே மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, இலவசமாக காய்கறிகளை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை செய்து வந்தார்.

கட்டணம் வாங்குவதில்லை
இந்த நிலையில் குருராஜ் தற்போது செய்யது வரும் அற்புத பணி அப்பகுதி மக்களையும், ஏன் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் வெகுவாக கவர்ந்து விட்டது. கொரோனா அலை தீவிரமாக உள்ள நிலையில் தனது ஆட்டோவை முற்றிலும் இலவச சேவை வழங்கும் வாகனமாக மாற்றியுள்ளார் குருராஜ். அதாவது மருத்துவமனைக்கு செல்லும் கொரோனா நோயாளிகளையும், பிற நோயாளிகளையும் கட்டணம் ஏதும் வாங்காமல் ஆட்டோவில் அழைத்து செல்கிறார். இது தவிர பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களையும் பணம் வாங்காமல் இலவசமாக அழைத்து செல்கிறார் இந்த மனித புனிதர். குருராஜின் நண்பர் அன்புநாதன் என்பவரும் இதே சேவையை செய்து வந்தார்.

ஸ்டாலின் பாராட்டு
குருராஜின் இந்த சேவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. இதனால் நெகிழ்ந்து போன அவர் குருராஜிக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கொரோனா முதல் அலையின் போதும், தற்போது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் - பிற நோயாளிகளையும் மருத்துவமனைக்கு கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்று உயிர் காக்கும் உன்னதமானப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

வாழ்த்துகிறேன்
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும், ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச் செல்லும் தன்னார்வலராகத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதன் அவர்களும் பாராட்டுக்குரியவர். பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.தாங்களும் குடும்பத்தினரும் நோய்த் தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications