எக்ஸ்னோரா நிர்மல் வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்- சென்னை மாநகராட்சி கால பந்தம்!
சென்னை: எக்ஸ்னோரா என்ற சுற்றுச் சூழல் அமைப்பின் நிறுவனரான நிர்மல் வீட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென விசிட் அடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மாநகர மேயராக இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி வகித்த காலத்தில் சென்னையில் படுதீவிரமாக செயல்பட்டது எக்ஸ்னோரா அமைப்பு. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக பல்வேறு நலத் திட்டப் பணிகளை எக்ஸ்னோரா மேற்கொண்டது. இந்த பணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றவர் எக்ஸ்னோரா நிர்மல்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் நிர்மல். ஆனால் அப்போது நிர்மலால் முதல்வரை சந்திக்க முடியாவில்லை.
இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 -வது மாடியில் உள்ள வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவருடன் அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோரும் நிர்மல் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பேசிய நிர்மல், முதல்வர் என்னை திடீரென சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக எளிமையானவர். என்னுடன் பல விஷயங்கள் தொடர்பாக 30 நிமிடங்கள் பேசினார் என்றார்.