ஆளுநரை மிகக் கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின்! தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? ஆர்.என்.ரவி பாய்ச்சல்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் பரஸ்பரம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள்அரசியலமைப்புக்கு முரணான செயல்களை மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தி இந்து நாளிதழில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. இந்த தலையங்கத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் அரசியலமைப்பு சாசனத்துக்கு முரணான அத்துமீறல்கள் மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் இழிவான போக்கு ஆகியவற்றை இந்து நாளிதழ் கண்டித்துள்ளது. சட்டசபையின் மாண்மை சீர்குலைக்கும் ஆளுநர், அப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்கிறது அந்த தலையங்கம் வலியுறுத்துகிறது.

ஆளுநர்களுக்கு எதிரான இத்தனை கண்டனங்களுக்குப் பின்னரும் டெல்லி பாஜக எஜமானர்கள் எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. ஆளுநர்கள் மூலம் அரசியல் பகையை தீர்த்து கொள்ள முனைகிறது பாஜக. பாஜகவின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என விமர்சித்திருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதில் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ்பவன்எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications