சட்டம் ஒழுங்கு + டிஐஜி விஜயகுமார் தற்கொலை - போலீஸ் உயரதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு காவல் துறையில் சமீபத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்று டிஜிபி சைலேந்திர பாபுவின் ஓய்வை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் தமிழ்நாடு டிஜிபியாக பதவியேற்றது. மற்றொன்று சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றது.

இதை கடந்து தமிழ்நாடு காவல்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய சம்பவமும் அரங்கேறியது. அதுதான் கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை. அது தொடர்பான பரப்பரப்புகளும் சர்ச்சைகளும் ஓயாத நிலையில் காவல்துறையில் இருக்கும் பணி சுமை தொடர்பான பேச்சுக்களும், போலீசாரின் மனநலம் குறித்தும் விவாதங்கள் எழுந்து உள்ளன.
இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்து உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருக்கும் 10 வது தளத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். அதிகாரிகளை பொறுத்தவரை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது குறித்தும், நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது, போலீசாருக்கு இருக்கும் மனநல சிக்கல்கள், பணிச்சுமை குறித்தும் முதலமைச்சர் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications