திமுக அமைச்சரவை மாற்றம்... இப்படி மந்தமாவா இருப்பாங்க... அந்த 3 பேருக்கு அதிரடி கல்தா?
சென்னை: திமுக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பெரிய அளவில் தங்களது துறைகளில் சோபிக்காத 3 அமைச்சர்கள் தூக்கி அடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமைச்சரவையில் உதயநிதி?
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பதுதான் முதலில் வெளியான தகவல். இதனைத் தொடர்ந்து உதயநிதிக்கு என்ன இலாகா ஒதுக்கப்படப் போகிறது? என்கிற ஆரூடங்கள் வலம் வந்தன. உதயநிதிக்கு எடுத்த எடுப்பில் வலிமையான துறைகள் எதுவும் கொடுக்கப்படமாட்டாது; சமாளிக்கக் கூடிய வகையிலான துறை ஏதேனும் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்பட்டது.

துறைகள் மாற்றம்
அத்துடன் துறை ஒதுக்கீடு விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கக் கூடிய சீனியர்களை சமாதானப்படுத்தும் வகையில் இலாகா மாற்றம் இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. அதுவும் தென் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் ஒருவர், ஒரு ஆண்டுகாலமாக தலைமையுடன் இந்த விவகாரத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். பசையே இல்லாத துறையை வாங்கி, பொதுவெளியில் அவரது குடும்பத்தினர் கூட கிண்டலடிக்கும் நிலைமை இருகிறது. இதனால் அடைந்தால் திராவிடநாடு ரேஞ்சுக்கு வெயிட்டான துறை என்கிற நிலைமையில் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த முறை லக் அடிக்கலாம் என்பது புதியதாக வெளியான தகவல்.

மேலும் 2 பேருக்கு அமைச்சர் பதவி?
தற்போது உதயநிதிக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்தால் அது சர்ச்சையாகும் என்பதால் மேலும் 2 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்பது புதிய தகவல். அப்படி 3 பேர் அமைச்சர்களாகும் நிலையில் ஏற்கனவே உள்ள அமைச்சர்கள் 3 பேர் தூக்கி அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அமைச்சர்களின் ரிப்போர்ட் கார்டுகளின் அடிப்படையில்தான் தற்போது நடவடிக்கை பாய உள்ளதாம். தென் மாவட்ட சீனியர் ஒருவரது பதவியும் பறிக்கப்பட இருக்கிறதாம்.

3 அமைச்சர்கள் நீக்கம்?
தென் மாவட்ட சீனியர் ஒருவருடன் கிடைத்த பதவியை தக்க வைத்து கோலோச்ச முடியாத 2 பேரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். இந்த பட்டியலில் உள்ள வடமாவட்ட அமைச்சர் ஒருவர், அந்த சீனியரை மீறி எதனையும் செய்ய முடியலை.. பதவி இருந்தா என்ன இல்லைன்னா என்ன? என குமுறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications