IIT செல்லும் பழங்குடியின மாணவி.. “உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்”.. முதல்வர் ஸ்டாலின் குட் நியூஸ்!
சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, IIT-யில் படிக்கத் தேர்வாகி அசத்தியுள்ளார். இதையடுத்து மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த பழங்குடி மாணவி ராஜேஸ்வரி, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு இவரது தந்தை புற்றுநோயால் உயிரிழந்த நிலையிலும், விடாப்பிடியாகப் படித்து சாதித்துள்ளார் ராஜேஸ்வரி. அரசு பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஐஐடிக்குச் செல்லும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையையும் பெறுகிறார் ராஜேஸ்வரி.

பழங்குடியின மாணவி
கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி. சேலத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர். இங்கு 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர். வறுமை மற்றும் அடிக்கடி இடம்பெயரும் சூழல் காரணமாக, அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகபட்சமாக 8ஆம் வகுப்பு வரையே படிக்கின்றனர்.
அங்கு உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. இவரது மனைவி கவிதா தினக் கூலியாக உள்ளார். ஆண்டி, தனது 4 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார். தையல் தொழில் செய்து வந்த ஆண்டி, மிகவும் கடினமான சூழலில், குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுத்துள்ளார். முதல் 2 பிள்ளைகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில், ஆண்டி புற்றுநோய் காரணமாக 2024ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
ராஜேஸ்வரி
எனினும் தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார் ராஜேஸ்வரி. சாதாரண பட்டப்படிப்பு அல்ல, நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடிக்கு செல்லத் தேர்வாகி உள்ளார் ராஜேஸ்வரி. ஜே.இ.இ தேர்வில் பழங்குடிப் பிரிவின்கீழ் அகில இந்திய அளவில் 417ஆம் இடத்தைப் பெற்றுள்ளார் ராஜேஸ்வரி.
முதல் பழங்குடியின மாணவி
இவருக்கு ஐஐடி சென்னையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இவருக்கு அரசு நடத்தும் உறைவிடப் பயிற்சி முகாமில், ஜேஇஇ தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஐஐடிக்குச் செல்லும் முதல் பழங்குடி மாணவர் என்ற பெருமையையும் ராஜேஸ்வரி பெற உள்ளார்.
மாணவி ராஜேஸ்வரி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 438 மதிப்பெண்களையும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. +2வில் கணக்கு - உயிரியல் பிரிவை தேர்வு செய்து படித்த ராஜேஸ்வரி, வேதியியல் மற்றும் கணக்குப் பாடத்தில் சிறந்த பதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
படிப்பு செலவு அத்தனையையும் அரசே ஏற்கும் - ஸ்டாலின்
இந்நிலையில் ஐஐடி செல்லும் மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஸ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications