பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- நிதி உதவி கேட்ட காங். மாஜி எம்.எல்.ஏ... கே.எஸ். அழகிரி பொளேர் பதில்
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த கட்சி தலைமையிடம் நிதி உதவி கேட்டிருக்கிறார் மாஜி காங். எம்.எல்.ஏ. அருள் அன்பரசு. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியோ அருள் அன்பரசுக்கு காட்டமான பதிலடி கொடுத்து அமைதிப்படுத்திவிட்டார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக காங். போராட்டம்
இதே பாணியில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த தமிழக காங்கிரசுக்கு கட்சியின் டெல்லி தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

அழகிரி ஆலோசனை கூட்டம்
இது குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கலந்துகொண்டனர். ஆனால், வேளச்சேரி எம்.எல்.ஏ.வும், ஜே.எம்.ஹாருனின் மகனுமான அசன், இந்த கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார்.

சீறிய செல்வபெருந்தகை
இதில் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சீமான் கட்சியை விஷச்செடி என விமர்சித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தை வலிமையாக நடத்தவும் , ஜூலை 15-ல் வரும் காமராஜர் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடவும் வலியுறுத்தினார் கே.எஸ்.அழகிரி.

நிதி உதவி கேட்ட மாஜி எம்.எல்.ஏ.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான நிதியை கட்சி கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலடி தந்த கே.எஸ். அழகிரி, மூன்று முறை உங்க அப்பா எம்.பி., நீங்கள் ஒரு முறை எம்.எல்.ஏ. என பதவியில் இருந்தீர்கள். நீங்களே நிதி கேட்டால் மற்றவர்கள் எங்கே போவார்கள் ? நிதி எல்லாம் தரமுடியாது என கறாராக சொல்ல, அமைதியாகி விட்டாராம் அருள் அன்பரசு.

விஸ்வரூபமான நிதி விவகாரம்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல நிர்வாகிகளும் நிதி உதவி கேட்க நினைத்திருந்தனர். ஆனா, அருள் அன்பரசுக்கு கே.எஸ். அழகிரி கொடுத்த காட்டமான பதிலில் மற்றவர்களும் நிதி கேட்பதை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டனராம். மக்கள் பிரச்சனைக்கு போராட்டம் நடத்த கட்சி தலைமையிடம் மாஜி எம்.எல்.ஏ. நிதி கேட்ட இந்த விவகாரம் இப்போது காங்கிரஸ் கட்சியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications