"அந்த 2 வி.ஐ.பி.க்கள்.." யாருக்கு ராஜ்யசபா சீட்? "500 மெயில்கள்.." காங்கிரசில் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டு மொத்தம் 12 பேர் மேலிடத்தை முட்டி மோதுகின்றனராம். அதேநேரத்தில் இந்த ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள் மீது 500க்கும் அதிகமான இ மெயில் புகார்கள் டெல்லிக்கு பறந்திருக்கின்றன என்கின்றன தகவல்கள்.
தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்- இன்று வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்- அதிமுக வேட்பாளர்கள் யார்?
புகார் மெயில்கள்
சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்.பிக்களும் அதிமுகவுக்கு 2 எம்.பிக்களும் கிடைப்பர். திமுக 3 எம்.பி பதவி வேட்பாளர்களை அறிவித்த கையோடு ஒரு எம்.பி. இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கி உள்ளது. இந்த இடத்தை கைப்பற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இருவரும் மோதுகின்றனர். ஆனால் இந்த இருவருக்குமே சீட் தர காங்கிரசில் கடும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களுக்கு எதிராக ராகுலுக்கு மட்டுமே 500-க்கும் மேற்பட்ட மெயில்கள் தமிழகத்தில் இருந்து பறந்துள்ளன.
ரேஸில் புதுமுகம்
இந்த நிலையில், காங்கிரஸ் ஐ.டி. விங்கை பராமரித்து வருபவரும், தேர்தல் காலங்களில் காங்கிரசுக்கான சர்வேக்களை எடுத்து தருபவரும், தேர்தல் வியூக வகுப்பாளர் என சொல்லிக் கொள்பவருமான ப்ரவீன் சக்ரவர்த்தி தமிழகத்தின் ஒற்றை ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற பகீரத முயற்சி எடுத்துள்ளார். இவருக்கு எதிராகவும் புகார்களை சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.
சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு?
இன்னொரு பக்கம் ராகுலின் குட் புக்கில் இருக்கும் மாஜி ஐ.ஏ.எஸ்.அதிகாரி சசிகாந்த் செந்திலும் ராஜ்யசபா சீட்டுக்கு அடி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு தரப்பட்ட ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு 12 பேர் மோதுகின்றனராம். இதனால் முடிவெடுக்க முடியாமல் இழுபறியாகவே இருக்கிறது என்கின்றன காங். வட்டாரங்கள்.
30-ல் வேட்பாளர் அறிவிப்பு?
இது குறித்து பேசும் காங்கிரஸ் நிர்வாகிகள், வேட்பு மனு தாக்கல் செய்ய 31-ந்தேதிதானே கடைசி நாள். காங்கிரசின் வழக்கமே வேட்புமனுவுக்கு முதல் நாள் தான் வேட்பாளரை அறிவிக்கும். அந்த வகையில், 30-ந்தேதி வரை இழுபறியாகத்தான் இருக்கும். விரைந்து முடிவெடுத்தால் அது காங்கிரஸ் கட்சியே கிடையாதே" என்று கிண்டலாக கூறுகின்றனர்.