"சைலேந்திர பாபு ஐயா! நாங்கள் நிம்மதியா டூட்டி பார்க்கணும்.." காஷ்மீரிலிருந்து தமிழக வீரர் வீடியோ
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த காஷ்மீரில் பணியாற்றும் சிஆர்பிஎஃப் படையில் பணியாற்றும் வீரர் ஒருவர் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு ஒரு கோரிக்கை அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், பேரூர் கிராமத்தில் வசித்து வருபவர் நீலமேகம். இவர் கடந்த 12 ஆண்டுகளாக சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் கோரிக்கை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீலமேகம்
அந்த வீடியோவில் நீலமேகம் முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் நான் காஷ்மீரில் சிஆர்பிஎப் படையில் பணியாற்றி வருகிறேன். எனது கிராமத்தில் எனது வீட்டில் வயதான அப்பா, அம்மா, மனைவி, 10 மாத குழந்தை ஆகியோர் உள்ளனர்.

மனைவி
இந்த நிலையில் எனது மனைவியின் தாலிக் கொடியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார். நாங்கள் ஆண்டுக்கு 3 முறையோ 4 முறையோ ஊருக்கு வந்து மனைவி, மக்களை பார்க்கிறோம். அதிலும் எங்களுக்கு பயண நேரமே மூன்று நாட்கள் சென்றுவிடுகின்றன.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
இந்த நிலையில் இது போல் எங்கள் குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லை என நினைக்கும்போது எங்களால் எப்படி நிம்மதியாக பணி செய்ய முடியும்? எனவே தவறு செய்தவர்கள் மீது டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து எங்களை போன்று ராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நிம்மதியான வாழ்வு
நாங்கள் நிம்மதியாக பணி செய்ய வழி வகை செய்ய வேண்டும் என நீலமேகலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பெரும்பாலான ராணுவ வீரர்களும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் இதை ஆமோதிக்கிறார்கள். ஏற்கெனவே பணி நிமித்தமாக பல டென்ஷன்கள் உள்ள நிலையில் இது போல் குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் போது மனம் வேதனையாக இருப்பதாக கூறுகிறார்கள். மழை, உறை பனி, பணிச்சுமை உள்ளிட்ட நெருக்கடிகளில் நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை மாநில அரசுகள் காக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications