மயிலம், மேட்டூர் தொகுதியை கேட்கும் அதிமுக.. சேலம், தர்மபுரியில் செக் வைத்த அன்புமணி.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாததால், பாமகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பாமக விரும்பும் 30 தொகுதிகளுக்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமி வசம் அன்புமணி அளித்துள்ளதாகவும், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாகி இருக்கிறது. ஏற்கனவே பாமகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதியாகிவிட்ட சூழலில், அடுத்தக் கட்டமாக தொகுதி பங்கீடு எண்ணிக்கை எப்போது நிறைவடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் பாஜக உடனான தொகுதி பங்கீடு இதுவரை முடிவுக்கு வரவில்லை.

பாஜக தரப்பில் சுமார் 55 தொகுதிகள் வரை கேட்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால், நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக - பாஜக இடையில் தொகுதி பங்கீடு நிறைவடையாததால், பாமகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில் 30 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல் எடப்பாடி பழனிசாமி வசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாமக சிட்டிங் எம்எல்ஏ-க்களின் தொகுதிகளான மயிலம் மற்றும் மேட்டூர் தொகுதிகளை அதிமுக கேட்கிறது.
மயிலம் தொகுதியில் போட்டியிட சிவி சண்முகம் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அதற்கான விருப்ப மனுவும் கொடுத்துள்ளார். இதன் காரணமாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கட்டாயமாக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாமக தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications