மீண்டும் கொங்கு பகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்பி.. தரமான சான்ஸை தவறவிட்ட எடப்பாடி!
சென்னை: ராஜ்ய சபா தேர்தலில் கொங்கு பகுதியைச் சேர்ந்த தம்பிதுரைக்கு அதிமுக தரப்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்ய சபா பதவி அளித்திருப்பதன் மூலமாக, சட்டசபைத் தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய சான்ஸை தவறவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் மைக்ரோ லெவனில் திமுக பணிகளை செய்து வருகிறது. விஜய்யின் வருகை காரணமாக சிறிய கட்சிகள், அமைப்புகளின் ஆதரவை கூட திமுக தவறவிடுவதில்லை.

அதேபோல் எந்த சமூகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது. அண்மையில் தென் மாவட்டங்களில் உள்ள ஃபெர்னான்டஸ் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விஜய் பக்கம் செல்வதாக பேசப்பட்டது. திமுகவில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குரல் கொடுத்து வந்தனர்.
அதனை சரி செய்யும் வகையில் ராஜ்ய சபா எம்பி வேட்பாளராக ஃபெர்னான்டஸ் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திமுக இப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வரும் சூழலில், அதிமுக மீண்டும் ஒரு தவறை செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் சமூக மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு போதிய முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி அளிப்பதில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. கொங்கு வேளாளர் கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமே அதிமுகவில் முக்கியத்துவம் அளிப்பதாக அக்கட்சி தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதனை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ராஜ்ய சபா தேர்தலில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிதுரைக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். அதேபோல் இன்னொரு சீட்டை பாமகவுக்கு ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கொங்கு மண்டலத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தென் மாவட்டங்களில் இருந்து தனது ஆதரவாளர் ஒருவருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தால், அது முக்குலத்தோர் சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும். ஓபிஎஸ், சசிகலா, கருணாஸ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு கூடுதல் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications