"போட்றா வெடியை".. சென்னைக்கு ரிட்டர்ன் ஆனதுமே ஸ்டாலின் மாஸ்.. ரூ.5,000 ஊக்கதொகை.. குஷியில் போலீஸார்!
தமிழக காவல்துறைக்கு ஊக்கத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: கொரோனா தொற்றுக் காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஜுன் 3-ம்தேதி கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திமுக அரசு பல்வேறு நலதிட்டங்களையும், சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டது.
அதன்படி, கொரோனா முதல் அலையில் இருந்து முன்களப்பணியாளர்களாக அரும்பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினருக்கும் ஊக்கத்தொகையை அறிவித்தது.

ஒதுக்கீடு
இந்நிலையில், தொற்றுக் காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அங்கீகாரம்
"தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஸ்டாலின்
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அறிவிப்புகள்
பதவியேற்றது முதல், ஏராளமான திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிட்டு பல்வேறு தரப்பினரை முதல்வர் மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.. மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், காவல்துறைக்கும் முக்கியத்துவம் தந்து, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது, கூடுதல் மகிழ்ச்சியை போலீசாருக்கு ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications