உடல்நலன் முக்கியம்.. பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஆதிக்கம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த பள்ளிகள் சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
சுமார் 19 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. நீண்ட மாதங்ககளுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மாணவர்களின் உடல் நலன்
இந்த நிலையில் கொரோனா இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வழக்கமான நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை உரிய காலத்தில் மாணவர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்ஃப்ளூயன்சா தொற்று
அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டும் வழங்கப்பட்டு வந்தன. அவற்றில் காசநோய் - பிசிஜி, கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய் - ஹெபிடைடிஸ்பி, இளம்பிள்ளை வாத - ஓபிவி, ஐபிவி, கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று, கல்லீரல் தொற்று - பென்டா, வயிற்றுப்போக்கு - ரோட்டா, எம்.ஆர் தட்டம்மை, ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், நிமோனியா - நியூமோகாக்கல் ஆகிய தடுப்பூசிகள் அடங்கும்.

மாணவர்களுக்கு தடுப்பூசி
கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. 5 முதல் 6 வயது வரையுள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியை வழங்க வேண்டும்.

இது மிகவும் அவசியம்
மேலும் 10 வயதுள்ள மாணவர்களுக்கும் ரண ஜன்னி தடுப்பூசி வழங்குவது அவசியம். இந்த நடவடிக்கையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications