திமுக ஆட்சி- பன்வாரிலால் அனுப்பிய அந்த ரிப்போர்ட்- விவரிக்க வரவழைத்த மோடி- டெல்லி பயணத்தின் பின்னணி!
சென்னை: திமுக ஆட்சி குறித்து அனுப்பி வைக்கப்பட்ட மிக முக்கியமான ரிப்பபோர்ட்டில் இடம்பெற்ற விவரங்களை விவரிக்கத்தான் ஆளுநர் பன்வாரிலால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது தாம் ஓய்வு பெற விரும்புவதாகவும் பிரதமர் மோடியிடம் கூறினாராம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து மாதத்திற்கு ஒரு ரிபோர்ட்டை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பதையும், 6 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமரை நேரில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருப்பவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கொரோனா தாக்கம் இந்தியாவை சூழ்ந்த நிலையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை நேரடி விசிட் என்பது தவிர்க்கப்பட்டது.
அதேசமயம், மாதம் ஒரு ரிப்போர்ட் அனுப்புவதை நிறுத்தவில்லை பன்வாரிலால். சமீபத்தில் தமிழக ராஜ்பவனில் இருந்து அப்படி அனுப்பிய ஒரு ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் பன்வாரிலால்.

டெல்லியில் பன்வாரிலால்
டெல்லி சென்ற அவர் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகிய மூவரையும் சந்தித்தார். திமுக அரசின் 2 மாத கால ஆட்சியை பற்றி கடந்த வாரம் ஒரு ரிப்போர்ட்டை அனுப்பியுள்ளார் ஆளுநர் பன்வாரிலால். அதில், அமைச்சர்களின் செயல்பாடுகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றத்தின் பின்னணி, திமுக குடும்பத்தினரின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் இருந்துள்ளன. நெகட்டிவ், பாசிட்டிவ் என இரண்டும் கலந்தவையாக அந்த ரிப்போர்ட் இருந்துள்ளது.

திமுக ஆட்சி குறித்த ரிப்போர்ட்
அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டவைகளை விரிவாக விளக்குமாறு ஆளுநரிடம் கேட்டுள்ளார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசிகளை அரசு கையாளும் முறைகள், சட்டம் ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி. ஆளுநர் பன்வாரிலால் கொடுத்துள்ள ரிப்போர்ட்டில் சொல்லப்பட்ட சில விவகாரங்கள, வருமானவரித்துறைக்கு பாஸ் செய்திருக்கிறது பிரதமர் அலுவலகம்.

ஓய்வு பெற விருப்பம்
இறுதியாக, தமிழக ஆளுநராகி 4 ஆண்டுகாலம் முடிய போகிறது. இன்னும் ஒரு ஆண்டு பதவியில் தொடருகிறீர்களா? திமுக ஆட்சியை கவனிப்பது உங்களுக்கு கம்பர்ட்டபிளாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு ஓய்வு பெறலாமா என்று இருக்கிறேன். இருந்தாலும் உங்கள் விருப்பம் எதுவோ அதை ஏற்கிறேன் என்று சொல்லியுள்ளார் பன்வாரிலால்.

ராஜ்நாத்சிங்குடன் சந்திப்பு
இதனையடுத்து, ஜனாதிபதியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால். பிரதமரை மட்டும் சந்தித்து விட்டு திரும்புவது மரியாதையாக இருக்காது என்பதால் ஜனாதிபதியையும் சந்தித்தார் பன்வாரிலால். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பன்வாரிலாலும் நீண்ட கால நண்பர்கள். மிகவும் பிஸியாக இருக்கும் இன்றைய கால கட்டத்தில் கூட வாரத்தில் 2 முறை தொலைபேசியில் அரசியல் நிலவரங்களை விவாதித்துக்கொள்கிற அளவுக்கு இருவருக்கும் நட்பு உண்டு. அந்த வகையில் ராஜ்நாத்தை சந்தித்தார் பன்வாரிலால். ராஜ்நாத்சிங்கின் பிறந்தநாள் (ஜூலை 10) என்பதாலும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால்.












Click it and Unblock the Notifications