நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து.. பல்வேறு தலைவர்களும் வாழ்த்து மழை!
சென்னை: தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியா மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தலைநகர் டெல்லியில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக் கொண்டார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடிகர் ரஜினிகாந்துக்கு விருதினை வழங்கினார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அன்பிற்கினிய ரஜினிகாந்த அவர்களே.. இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்க பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இளைஞர்களை கவர்த்திழுத்த பண்பாளர்
இந்நாள் திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பொன்னாளாகும். இந்திய திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்த்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்' என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த்திற்காக வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசு இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு ஆண்டுதோறும் வழங்கும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. மகிழ்ச்சி அளிக்கிறது.

பெருமை சேர்க்க வேண்டும்
இது தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தனது நடிப்பு திறமையால் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் பாராட்டப்படும் நடிகர். கலை சேவையிலும் சிறந்து விளங்குபவர். ரசிகர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்து வருபவர். நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைத்துறையில் சிறந்து விளங்கி மேலும் பல்வேறு விருதுகளை பெற்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று ஜி.கே.வாசன் கூறியுளளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'திரை உலகின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' பெற்றுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆண்டவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனிடம் பிராத்திக்கின்றேன்! ஜெய்ஹிந்த் Flag of India!'' என்று தெரிவித்துள்ளார்

நடிகை குஷ்பு
நடிகையும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ''நரேந்திரமோடிஜியின் தலைமையில் அரசாங்கத்தால் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற அன்பான ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்களுக்கு பெருமையாக இருந்தீர்கள், உங்களை விட யாரும் இதற்கு தகுதியானவர்கள் அல்ல. வாழ்த்துக்கள் தலைவா' என்று பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications