வெற்றி உடல் அருகே சோகமே உருவாக நின்ற சைதை துரைசாமி..கையை பிடித்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வெற்றி துரைசாமியின் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த 4 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த 8 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி , செல்போன்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. ரத்தக்கறை, மூளையின் பாகம் ஆகியவை பாறையில் கண்டெடுக்கப்பட்டது. இவற்றின் மாதிரிகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய இமாச்சல பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். இதையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது.

சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மகனின் உடல் அருகே சோகமே உருவாக சைதை துரைசாமி நின்று கொண்டிருந்தார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் திருமாவளவன், சீமான், சசிகலா, அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அருகில் நின்ற சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். வெற்றி துரைசாமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications