"இரட்டை பதவி".. தமிழக ஆளுநரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.. ஹைகோர்ட்டில் நடந்த 'பரபர' வாதம்
சென்னை: ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவ்வாறு ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், "ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய அரசியல் சாசனம் 158 (2)-வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்க கூடாது என்பது விதி. எனவே, ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார். எனவே அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என கோரப்பட்டது.
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. எனினும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானது தான். தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும். மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.
மேலும், பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு, விசரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications