பாஜக எம்எல்ஏ வந்தாலும், அரசு உதவிபெறும் பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நோ அனுமதி: ஹெச்.எம் அதிரடி
கோபி: இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெண்கள் பிரிவின் நிகழ்ச்சியை அரசு உதவி பெறும் பள்ளியில் நடத்த அனுமதிக்கவே முடியாது என்று கோபிசெட்டிபாளையம் வைரவிழா ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமாக மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்கும். அதேபோல் பெருநகரங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு பிரிவு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். விழா
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வைரவிழா ஆரம்பப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பெண்கள் பிரிவான, ராஷ்ட்ர சேவிகா சமிதி (அகில பாரத பெண்கள் அமைப்பு) சார்பாக பெண்களின் ஆளுமை வளர்ச்சி முகாமின் நிறைவு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

யார் யார்?
இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி, ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரத தலைவர் சாந்தாக்கா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். பெண்கள் பிரிவின் ஊர்வலமானது கோபிசெட்டிபாளையம் முக்கிய வீதிகள் வழியாக வந்து வைரவிழா ஆரம்பப் பள்ளியை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஹெச்.எம். கடிதம்
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கோபிசெட்டிபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உஷாராணி பெயரிலான ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு மறுப்பு
அக்கடிதத்தில், எமது அரசு பள்ளி நிதி உதவி பெறும் பள்ளியாகும். மேலும் இது போன்ற பள்ளிகளில் அரசு சார்புடைய விழாக்கள் மட்டுமே நடத்த அனுமதி உள்ளது. எமது பள்ளியில் இன்று ராஷ்ட்ர சேவிகா சமிதி பெண்கள் அமைப்பு சார்பில் நிறைவு விழா கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே இது போன்ற ஒரு தனிப்பட்ட அமைப்புகளுக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் விழாக்கள் நடத்த அனுமதி வழங்க இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications